பின்லேடன் Reuters
இந்தியா

செப்டம்பர் 11 தாக்குதல்.. பின்லேடன் ஹிட் லிஸ்டில் இந்தியா? சிஐஏ வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

இரட்டைக் கோபுரத் தாக்குதல் உள்ளிட்ட செப்டம்பர் 11 தாக்குதல்கள் நடப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஒசாமா பின்லேடன் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அமெரிக்காவின் சிஐஏ வெளியிட்டுள்ள ரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Premkumar S

உலகை உலுக்கிய அமெரிக்காவின் நைன் லெவன் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான சிஐஏ, 71 ரகசிய ஆவணங்களை தற்போது பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இதில், 1998-2001 வரையிலான காலக்கட்டத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உளவுத்துறை அறிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

CIA

"பின் லேடன் பயங்கரவாத வலையமைப்பு இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது" (Bin Ladin Terrorist Network Still a Threat) என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில், ஒசாமா பின்லேடன் தலைமையிலான பயங்கரவாத வலையமைப்பு பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, எகிப்து, அரேபிய தீபகற்பம், குவைத், சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தானும் சாத்தியமான இலக்குகளாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் எந்த இடத்தில் அல்லது எவ்வாறு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது என்பது குறித்து குறிப்பிட்ட தகவல்கள் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

1998-ல் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, பின்லேடன் மற்றும் அல்-கொய்தா மீதான அமெரிக்க உளவுத்துறையின் கவனம் தீவிரமடைந்தது. இதன் பின்னர், 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி அமெரிக்காவில் அல்-கொய்தா நடத்திய தாக்குதலில் 2,977 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 9/11க்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா உள்ளிட்ட நாடுகளை அல்-கொய்தா சாத்தியமான இலக்குகளாக கருதியிருந்தது தற்போது வெளியான சிஐஏ ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.