இந்தியா

‘கொரோனாவை கட்டுப்படுத்த உதவுகிறோம்’ - இந்தியாவுக்கு கைகொடுக்கும் சீனா

‘கொரோனாவை கட்டுப்படுத்த உதவுகிறோம்’ - இந்தியாவுக்கு கைகொடுக்கும் சீனா

webteam

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியாவுக்கு உதவி செய்யத் தயார் என சீனா அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உருவானதே சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான். இந்தியாவைப் போன்று நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட சீனா கொரோனா சீற்றத்திற்கு மிரண்டுபோனது. சீனாவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பாதித்தது. 3,270 பேர் இதில் உயிரிழந்தனர். ஆனால், சீனாவின் விஸ்வரூப நடவடிக்கைகளால் கொரோனா அங்கு கட்டுக்குள் வந்தது.

இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,270ல் நின்றது. 72,703 பேர் சிகிச்சையில் பலன் பெற்று வீடு திரும்பினர். இன்னும் 5,120 பேர் மட்டுமே கண்காணிப்பின் கீழ் சிகிச்சையில் உள்ளனர். சீனா தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்ததை பார்த்து மற்ற நாடுகள் வியப்படைந்துள்ளன. அதேசமயம் கொரோனாவை கட்டுப்படுத்திய சீனா தற்போது மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறது.

முதல் கட்டமாக 19 நட்புறவு நாடுகளுக்கு சீன உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இதில் இந்தியாவும் ஒன்று. வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்தபோது, இந்திய அரசு சார்பில் முகக்கவசம் உட்பட 15 டன்கள் மருத்துவ சாதனங்கள் ராணுவ விமானம் மூலம் அளிக்கப்பட்டன. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் தற்போது இந்தியாவிற்கு உதவ சீன முன்வந்திருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தாங்கள் பயன்படுத்திய யுக்தியை 19 நாடுகளுக்கும் சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கெங் ஷாவுங் காணோளி சிறப்புக் கூட்டம் மூலம் பகிர்ந்துக்கொண்டார். இதில் தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்றன.

அப்போது அனைத்து நாடுகள் சார்பிலிருந்தும் பங்கேற்ற பிரதிநிதிகள் மற்றும் மருத்துவக்குழுக்கள் கொரோனா தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு கெங் ஷாவுங் மற்றும் சீன மருத்துவக்குழுவினர் 80 பேர் உரிய விளக்கங்களை கொடுத்தனர். காணொளிக்கூட்டத்தில் பேசிய கெங், இந்தியாவில் கொரோனா பரவுவதை கண்காணித்து வருவதாகவும், இந்தியா மற்றும் சீனா மட்டுமே நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அத்துடன் இந்தியாவுடன் இணக்கமான நட்புறவு இருப்பதால் உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சீனாவில் உள்ள இந்தியர்கள் அனைவருக்கும் போதிய மருத்துவ சேவைகள் மற்றும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.