செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா BRICS உச்சி மாநாட்டை நடத்துகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஷி ஜின்பிங் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இந்தியா வரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பயணம் உறுதி செய்யப்பட்டால், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஷி ஜின்பிங் இந்தியா வரும் பயணமாக இது அமையும்.
2019-ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது அவருடன் 200-க்கும் குறைவான அதிகாரிகளே இருந்தனர். ஜின்பிங்கின் வருகையை கருத்தில்கொண்டு, சீன அதிகாரிகள் ஹோட்டல் முன்பதிவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020-ஆம் ஆண்டு இமயமலை எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா-சீனா உறவில் கடும் பதற்றம் ஏற்பட்டது. அந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் நீடித்த ராணுவ பதற்றத்துக்குப் பிறகு, 2024 அக்டோபரில் இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொள்ளும் ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
இந்நிலையில், சமீப ஆண்டுகளில் இரு நாடுகளும் மீண்டும் தூதரக உறவுகளை மேம்படுத்த முயன்று வருகின்றன. இந்தச் சூழலில் ஷி-யின் இந்தியப் பயணம் இருதரப்பு பேச்சுவார்த்தையை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.