இந்தியா

சிறார் தடுப்பூசி இரண்டாம் தவணை: மாநில அரசுகள் கவனம் செலுத்த மத்திய அரசு கடிதம்

kaleelrahman

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசிக்கு தகுதியானவர்கள். இந்தியாவை பொருத்தமட்டில் இதுவரை மாநிலங்களுக்கு 166.68 கோடி தடுப்பூசிகள் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக அதிகமானது இது.

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்தியாவில் கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இன்று வரை இந்த வயதுடைய 4.66 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட்டு வருவதால் 28 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். எனவே ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்ட சிறார்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்த மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக தினமும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

மாவட்ட அளவில் இதேபோன்று மறுஆய்வு செய்ய வேண்டும். 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட இரண்டாவது டோசுக்கு உரிய பயனாளிகள் பற்றிய தரவு கோவின் இணையதளத்தை அணுகலாம். எனவே அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய மாநிலத்தில் பதினைந்து வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.