இந்தியா

ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு பாதுகாப்பிற்காக 24.5 லட்சம் ஒதுக்கீடு..!

webteam

ஜெகன்மோகன் ரெட்டி வீட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி இமலாய வெற்றியை பெற்றது. இதனையடுத்து அந்தக் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

இதனிடையே ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாவோயிஸ்ட்களின் கொலை மிரட்டல் காரணமாகவும், செம்மரக்கடத்தல் வியாபாரிகளின் மிரட்டல் காரணமாகவும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. 

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அவரது மகனுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி வீட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பாணையை ஆந்திர அரசு நேற்று வெளியிட்டுள்ளது. ஹைதராபாத், பஞ்சராஹீல்சில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் பொருட்களை சோதனை செய்யும் அறை, சிசிடிவி அறை, காவல் நிலைய அதிகாரிகள் அறை, கழிவறைகள் ஆகியன அமைக்கப்பட உள்ளன.