இந்தியா

தமிழகத்தில் நிதி ஒதுக்காமலேயே முதல்வர் திட்டங்களை அறிவிக்கிறார்: ப.சிதம்பரம் புகார்

தமிழகத்தில் நிதி ஒதுக்காமலேயே முதல்வர் திட்டங்களை அறிவிக்கிறார்: ப.சிதம்பரம் புகார்

Veeramani

தமிழக முதல்வர் பழனிசாமி சமீபகாலமாக தான் அறிவிக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்காமலேயே எப்படி திட்டங்களை செயல்படுத்த முடியும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ப.சிதம்பரம் பேசியதாவது “கூட்டணிக் கட்சியினர் மதிக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும். கட்சியில் உள்ள இளைஞர்கள் கட்சியை வலுப்படுத்த ஏராளமானோரை காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும். அம்மா ஆட்சி தொடர வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும், ஏற்கனவே அம்மா ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்களுக்காகத்தான் தான் உச்ச நீதிமன்றம் சிறை தண்டனை, அபராதம் விதித்துள்ளது .

அம்மா ஆட்சி தொடர வேண்டும் என்ற பிரச்சாரத்திற்காகவே அதிமுக அணியை மக்கள் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் செய்யாத திட்டங்களையெல்லாம் ஐந்து நாட்களாக பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்து வருகிறார். பயிர்க் கடன் தள்ளுபடி ,இலவச மின்சாரம் போன்ற திட்டங்களுக்கு பணம் ஒதுக்க வில்லை. பணம் ஒதுக்காமலேயே  திட்டங்களை மட்டும் முதல்வர் அறிவித்து வருகிறார், இவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு  இந்த ஆண்டு நிதி ஒதுக்க வேண்டியது இருக்காது. இதுபோன்று தேர்தலின் போது அறிவிக்கப்படும் திட்டங்கள் எல்லாம் எல்லாம் தீபாவளி மத்தாப்பு போல் ஆகிவிடும். இந்தியாவின் தொன்மையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு கீழடி எடுத்துக்காட்டாகும். இந்தி மொழியை தூக்கிப் பிடிக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக ஆட்சி தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத ஆட்சியாகும்.

பாஜகவுடன் கூட்டணி இருக்கும் வரை அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை, பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலில் இஸ்லாமியர்களை வேட்பாளராக அறிவிப்பது கிடையாது .சிறுபான்மையினரை அந்த கட்சி இரண்டாம் தர குடிமக்கள் போல் நடக்கிறது. கடந்த 36 மாதங்களில் இந்திய நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது .பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதிலேயே பாரதிய ஜனதா அரசு குறியாக உள்ளது.

இந்த ஆட்சியில் இதுவரை 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் 6.40  கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்தி விட்டனர், ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது. சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள் ,விவசாயிகள் பலன் அடையும் வகையில் எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை .அறிவிக்கப்பட்டுள்ள பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் இல்லை, நிதி ஒதுக்காமலேயே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இது குறித்து நான் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மறுக்கின்றனர். ஏழைகளுக்கு எதிரான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.