இந்தியா

“டெல்லி தேர்தலை தவறின்றி நடத்துங்கள்” - தலைமை தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்

webteam

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வித தவறும் இன்றி நடத்த வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தலை நடத்த இந்திய அரசியல் சாசனம் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது என்றார்.

 இதனைக் கருத்தில் கொண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலை தவறு இல்லாமல் நடத்த அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள், டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.