சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று அறிவிக்க இருக்கிறது.
நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வசம் இருந்த, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்தியப் பிரதேச முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க, போபாலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பின் மூத்த தலைவர் கமல்நாத்தை முதல்வராக காங்கிரஸ் அறிவித்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட்டை தேர்வு செய்து அறிவித்தது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. நாடாளுமன்ற உறுப்பினர், தம்ராத்வாஜ் சாஹூ, மாநிலத் தலைவர் புபேஷ் பாஹெல், மூத்த தலைவர் டி.எஸ். சிங்தியோ ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இதில் புபேஷ் பெஹலுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் புபேஷ் பாஹெல் இன்று ராய்ப்பூர் திரும்பினார். அவர் கூறும்போது, ‘மல்லிகார்ஜுன கார்கேவும் பி.எல்.புனியாவும் இன்று இங்கு வருகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. அதற்கு பிறகு முதலமைச்சர் யார் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்’ என்றார்.