இந்தியா

நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர் ராவ்

நாளை பதவியேற்கிறார் சந்திரசேகர் ராவ்

webteam

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தெலுங்கு தேசம் கட்சி போட்டியிட்டது. பாஜக தனித்து களம் கண்டது. இதனால், மும்முனை போட்டி நிலவியது. 

கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே கூறிய நிலையில் மொத்தமுள்ள 112 தொகுதிகளில்  டிஆர்எஸ்  88 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. இதன்மூலம் சந்திரசேகர ராவ் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராகிறார்.

இந்நிலையில் தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் நாளை பதவி ஏற்கிறார். தெலங்கானா சட்டப்பேரவையில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமாக 88 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே தெலங்கானா மாநில முதலமைச்சராக சந்திரசேகர் ராவ் இன்றே பதவி ஏற்பார் என முதலில் சொல்லப்பட்ட நிலையில் நாளை தான் அவர் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 11‌.30 மணிக்கு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம் எல் ஏக்கள் கூடி சட்டப்பேரவை கட்சித் தலைவராக முறைப்படி சந்திரசேகர் ராவை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட காங்கிரஸ் 19 இடங்களை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைத்திருக்கின்றன. மஜிலிஸ் முஸ்லீமீன் கட்சி 7 இடங்களை பிடித்துள்ளது. பாரதிய ஜனதா, பார்வர்டு பிளாக், சுயேச்சை ஆகியோருக்கு தலா ஒரு இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.