இந்தியா

முறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்

முறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்

rajakannan

ஐசிஐசிஐ வங்கி தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து சந்தா கோச்சர் விலகினார். 

வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் முன் கூட்டியே ஓய்வு பெற விரும்புவதாக வங்கி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். சந்தா கோச்சரின் கோரிக்கையை ஐசிஐசிஐ இயக்குநர்கள் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் சந்தா கோச்சரின் ராஜிநாமா கடிதத்தினை உடனே ஏற்பதாகவும் ஐசிஐசிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ3250 கோடி வழங்கப்பட்டது. இதில், மொத்த கடன் தொகையில் சுமார் 86 சதவீதம் இன்னும் திருப்பி செலுத்தப்படவில்லை. இதனையடுத்து, 2017ம் ஆண்டு வீடியோகான் நிறுவனம் என்.பி.ஏவை அறிவித்தது. அதாவது, Non-performing asset எனும் செயல்படாத சொத்து கணக்கை அறிவித்தது. இதனால், வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, ஐசிஐசிஐ இயக்குநர்கள் குழு சந்தா கோச்சரின் மீது விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாமாக முன் வந்து அவர் பதவி விலகியுள்ளார். வங்கியின் இயக்குநர்கள் குழுவில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சந்தீப் பக்‌ஷியை முதன்மை இயக்குநராகவும், முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் ஐசிஐசிஐ இயக்குநர்கள் குழு நியமித்துள்ளது. இவரது பதவிக் காலம் அக்டோபர் 3, 2013 வரை அடுத்த 5 ஆண்டுகள் இருக்கும்.