இந்தியா

மோசடி வழக்கில் கைதான சந்தா கோச்சார் விடுதலை - விசாரணையில் பரபரப்பு வாதம்!

webteam

பணமோசடி வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரையும், அவரது கணவர் தீபக் கோச்சாரையும் விடுதலை செய்ய மும்பை உயர் நீதிமன்றம் இன்று (ஜனவரி 9) அனுமதி வழங்கியுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். அப்போது சந்தா, வீடியோகான் குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகார் குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் சந்தா கோச்சாரும், அவரது கணவர் தீபக் கோச்சாரும் கைது செய்யப்பட்டனர்.

சிபிஐயின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே, தம்பதிகள் இருவரும், வரும் ஜனவரி 15ஆம் தேதி நடைபெற இருக்கும் தங்களின் மகனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று (ஜனவரி 9) மீண்டும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், "ஊழல் தடுப்புச்சட்டத்தின் பிரிவு 17 ஏயின்படி எங்களின் கைது சட்டவிரோதமானது. அதன்படி ஒரு விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிபிஐ அப்படி எந்த முன் அனுமதியும் பெறவில்லை" என வாதம் வைக்கப்பட்டது.

மேலும், "சந்தா கோச்சார் கைது செய்யப்படும்போது பெண் அதிகாரி யாரும் அங்கு இல்லை" என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்கள், "குற்றவியல் நடைமுறை சட்டப்படி, இருவருக்கும் முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்கள் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். சிபிஐ அழைத்தபோது எல்லாம் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். அதனால் இதில் கைது நடவடிக்கைக்கு அவசியம் இல்லை” என்று தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த சிபிஐ, ”உடல் மொழி மற்றும் கேள்விகளை தவிர்க்கும் படியான பதில்களை ஒத்துழைப்பு என்று கருத முடியாது. விசாரணை அதிகாரி முன்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது. அவரை ஒரு பெண் காவலரே முழுமையாக சோதனை செய்தார்" என தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மும்பை உயர்நீதிமன்றம், ”இந்த கைது நடவடிக்கை சட்டப்படி நடக்கவில்லை என்று கூறி, சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் விடுதலை செய்ய அனுமதி அளித்தது. மேலும், அவர்கள் இருவரும் தங்களுடைய பாஸ்போர்ட்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.