சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோவின் 10% விமானச் சேவைகளைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகளால் இண்டிகோ விமானச் சேவை, கடந்த சில நாட்களாகக் கடுமையாகப் பாதிப்பைச் சந்தித்தது. கடந்த வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கலை எதிர்கொண்டனர். அவசரத் தேவைக்குக்கூட அவர்கள் உடனே சொந்த ஊரோ, நாடோ செல்ல முடியாமல் அவஸ்தையை எதிர்கொண்டனர். அது இன்று வரை தொடர்கிறது. இதற்கிடையே இதுதொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோ நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், இண்டிகோ விமானங்கள் ரத்தான நிலையில் பணத்தை திருப்பி கொடுக்க மத்திய அரசு கெடு விதித்தது. அதன்படி, டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரீபண்ட் செய்துள்ளது. மேலும், பயணிகளுக்கு டிக்கெட் தொகையை திருப்பித்தந்த இண்டிகோ நிறுவனம் அவர்களின் உடைமைகளையும் திருப்பித் தந்துள்ளது. மேலும், படிப்படியாக விமானச் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இண்டிகோவின் 10% விமானச் சேவைகளைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைத் தொடர்ந்து, இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் கட்டளையிடப்பட்ட 10% செயல்பாடுகளைக் குறைப்பதற்கு இணங்க, அதன் அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து சேவை செய்யும் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதி, வெறும் 700 விமானச் சேவைகளை இயக்கிய இண்டிகோ நிறுவனம், பின்னர் அடுத்த நாள் (டிச.6) 1,500 அதிகரித்தது. அடுத்து டிசம்பர் 7ஆம் தேதி 1,650 ஆக அதிகரித்த இண்டிகோ நிறுவனம் நேற்றும் இன்றும் (8, 9 தேதி) 1,800 விமானச் சேவைகளை இயக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று மட்டும் இண்டிகோ அதன் நெட்வொர்க்கில் உள்ள 138 இடங்களுக்கும் சேவைகளை சரியான நேரத்தில் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ, தினசரி சுமார் 2,300 சேவைகளை இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதில், 10 சதவிகிதத்தைக் குறைக்க தற்போது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.