இந்தியாவில் 'மொத்த விலை' பணவீக்கத்தைக் கணக்கிடும் முறையில் மத்திய அரசு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. தற்போது நடைமுறையிலுள்ள 'மொத்தவிலை குறியீடு' முறைக்கு பதிலாக, மிகவும் துல்லியமான 'உற்பத்தியாளர் விலை குறியீடு' முறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, மொத்த விலை குறியீடு முறையின் அடிப்படை ஆண்டு 2011–12 என்பதில் இருந்து 2022–23 ஆக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. புதுப்பிக்கப்பட்ட குறியீடுகள் ஜூன் 15 அன்று வெளியிடப்படவுள்ளன.
பயனர்களின் வசதிக்காக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்த விலை குறியீடு மற்றும் உற்பத்தியாளர் விலை குறியீடு ஆகிய இரண்டு முறைகளும் இணையாகச் செயல்படும்; அதன்பிறகு மொத்த விலை குறியீடு முறை முழுமையாக நிறுத்தப்படும் என்று வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய உற்பத்தியாளர் விலை குறியீடு முறை பொருட்களின் உற்பத்திச் செலவு மட்டுமின்றி, முதன்முறையாக வங்கி, ரயில்வே, டெலிகாம் உள்ளிட்ட 7 முக்கியச் சேவைத் துறைகளின்பணவீக்கத்தையும் சேர்த்துக் கணக்கிடும். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.