இந்தியா

10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா - மாநிலங்களவையில் நிறைவேறியது

rajakannan

மக்களவையை தொடர்ந்து பொதுப் பிரிவில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

பொருளாதார ரீதியில் நலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

மாநிலங்களவையில் மசோதா தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. திமுக சார்பில் கனிமொழியும், அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக பேசினர். காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இருப்பினும், தேர்தல் லாபத்தை கருத்தில் கொண்டே திடீரென மசோதாவை கொண்டுவந்துள்ளதாக விமர்சனங்களையும் முன் வைத்தன.

இறுதியாக இந்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றது. முதலில் கனிமொழி கொண்டு வந்த, மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்புவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், இந்த மசோதா தோல்வியில் முடிந்தது. போதிய ஆதரவு அந்த கோரிக்கைக்கு கிடைக்கவில்லை.

பின்னர், 10 சதவிகித இடஒதுக்கீட்டு மசோதாவுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 149 உறுப்பினர்கள் ஆதரவாகவும். 7 உறுப்பினர்கள் எதிர்ப்பாகவும் வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. திமுக, அதிமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. 

மக்களவையில் 323 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்கனவே மசோதா நிறைவேறி இருந்தது. இதனையடுத்து, மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அவரது ஒப்புதலுக்கு பின்னர் நடைமுறைக்கு வரும்.