எல்பிஜி பயன்பாட்டை குறைத்து, வீடுகளுக்கு குழாய் வழியாக பிஎன்ஜி இயற்கை எரிவாயு விநியோகத்தை விரைவுபடுத்த மத்திய பெட்ரோலியத் துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி சார்பை குறைத்து அந்நியச் செலாவணி சேமிப்பும், குறைந்த விலை, அதிக பாதுகாப்பு, மேம்பட்ட எரிதிறன் ஆகிய பலன்களும் அரசின் நோக்கமாக கூறப்படுகிறது.
வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை விரைவுபடுத்த மாநில அரசுகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அறிவுறுத்தியுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக மாவட்டந்தோறும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை நியமிக்கவும் பெட்ரோலியத் துறை வலியுறுத்தியுள்ளது.
வீடுகளில் தற்போது எல்பிஜி எனப்படும் திரவமாக்கப்பட்ட சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதிலிருந்து குழாய் வழியிலான இயற்கை எரிவாயுவுக்கு மக்களை மாற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து எல்பிஜியை இறக்குமதி செய்வது போர்க்காலங்களில் பெரும் சிக்கலாக இருப்பதுடன் நாட்டுக்கு அந்நியச்செலாவணி பிரச்சினையும் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவே உள்நாட்டில் கணிசமாக உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை குழாய் வழியே வீடுகளுக்கு விநியோகிப்பதை ஊக்குவிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது . எல்பிஜியை விட பிஎன்ஜி விலைகுறைவானதாகவும் பாதுகாப்பானதாகவும் எரிதிறன் மிகுந்ததாகவும் அரசு கூறுகிறது.