telegram web
இந்தியா

டெலிகிராம் செயலியில் திருட்டுத் திரைப்படங்கள்.. மீண்டும் அதிரடி காட்டிய மத்திய அரசு!

3,142 சட்டவிரோத சேனல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றின் பின்னால் உள்ள குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

PT WEB

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த டெலிகிராம் செயலியில், காப்புரிமை பெற்ற திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப் சீரிஸ்கள் திருட்டுத்தனமாக பகிரப்படுவதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. 3,142 சட்டவிரோத சேனல்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றின் பின்னால் உள்ள குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15 நாட்களில் விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது.

செய்தியாளர் ; m. மீரா

நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்கும் ஒரு பகுதியாக, நீட் மறுதேர்வு முடியும்வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதுகுறித்து அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தபோது மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் டெலிகிராம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தது மத்திய அரசு.

telegram

டெலிகிராம் செயலி புதிய டார்க் வெப் ஆக மாறியுள்ளதாகவும், சட்ட அமலாக்கத் துறையிடமிருந்து தப்பிப்பதற்காகக் குற்றவாளிகள், இணையவழி மோசடியாளர்கள், தீவிரவாதக் குழுக்கள் மற்றும் பிற அச்சுறுத்தல் சக்திகளால் இது அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 22 வரை டெலிகிராம் மற்றும் அதன் இணையச் சேவைகளுக்கு மத்திய அரசு ஒரு வாரம் தடை விதித்திருந்தது.

அந்த தடைக்காலம் முடிந்து டெலிகிராம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், பல்வேறு ஓடிடி தளங்கள் மற்றும் உள்ளடக்க உரிமையாளர்களிடமிருந்து வந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து, காப்புரிமை பெற்ற திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் டெலிகிராமில் அனுமதியின்றிப் பகிரப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்திய மத்திய அமைச்சகம், சட்டவிரோத உள்ளடக்கங்களை விநியோகிக்கும் 3,142 டெலிகிராம் சேனல்களைத் தற்போது கண்டறிந்துள்ளது. வெறும் சேனல்களை மட்டும் முடக்குவதோடு நிறுத்தாமல், இதன் பின்னால் இருக்கும் முழுக் குழுவையும் அவர்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

telegram

இதனைத் தொடர்ந்து டெலிகிராம் செயலியில் சட்டவிரோதமாகப் பகிரப்படும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி கன்டென்ட்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று (ஜூலை 4) நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த ஆன்லைன் பைரசி விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை இன்னும் 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம், திரைப்படத் துறை, ஒளிபரப்பாளர்கள், ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .