ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்தகுழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
வடமாநிலங்களில் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதுகுறித்து மத்திய அரசு விளக்கமளித்திருப்பதுடன், குழந்தைகளுக்கு மருந்தைப் பரிந்துரைப்பது தொடர்பாக அறிவுரை வழங்கியுள்ளது. அதுகுறித்த செய்தியை இங்கு காண்போம். மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 12 குழந்தைகள் உயிரிழந்தனர்.அதே நேரத்தில் ஐந்து குழந்தைகள் மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூரில் சிறப்பு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மத்திய மருந்து தர கட்டுப்பாடு மைய அதிகாரிகள், குழந்தைகள் குடித்த குடிநீர், இருமல் மருந்து மாதிரிகள், டாக்டர்களின் பரிந்துரை கடிதம் உள்ளிட்டவைகளைச் சேகரித்து ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தைகளின் உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து, அந்த மருந்தைத் தயாரித்துவரும் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநருக்கு மத்திய பிரதேச அரசு கோரிக்கை வைத்தது. பின்னர், கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்தை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய தடை விதித்து மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட'கோல்டரிப் சிரப்' மருந்து மாதிரிகளை ஆய்வு செய்ததில், சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய டை எத்திலின் கிளைக்கால் போன்ற ரசாயனக் கலப்படம் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன. மேலும், உயிரிழந்த குழந்தைகளில் ஒருவருக்கு 'லெப்டோஸ்பிரோசிஸ்' எனும் விலங்குகளால் பரவும் நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இருமல் மருந்து குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அல்ல என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மறுபுறம், இருமல் மருந்து உட்கொண்டதால் 12 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்தைக் கொடுக்க கூடாது என மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. ‘இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளைப் பரிந்துரைக்கவோ அல்லது வழங்கவோ கூடாது’என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவை பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை என்றும், அதற்கு மேல், எந்தவொரு பயன்பாடும் கவனமாக மருத்துவ மதிப்பீட்டைப் பின்பற்றி, நெருக்கமான மேற்பார்வை மற்றும் பொருத்தமான அளவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் பல மருந்து சேர்க்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அது அறிவுறுத்தியுள்ளது.