இந்தியா

நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம் - மத்திய அரசு புதிய தகவல்

கலிலுல்லா

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்ட மாற்றம் 2022-23ஆம் கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றி மத்திய அரசு அறிவித்தது. நவம்பர் மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது தேர்வு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதனை அடுத்து மத்திய அரசின் முடிவை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவப் படிப்பு முழுவதும் வணிகமயமாகி விட்டதாகக் கருத்து தெரிவித்திருந்தனர். தனியார் மருத்துவக் கல்லூரியில் காலியிடங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தாங்கள் கருதுவதாகவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் இன்று நடைபெற்ற நிலையில், பாடத்திட்ட மாற்றம் 2022-23ஆம் கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வரும் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.