இந்தியா

`மகப்பேறில் குழந்தை இறந்தால் தாய்க்கு 60 நாட்கள் சிறப்பு விடுப்பு!’ மத்திய அரசு அறிவிப்பு

webteam

மகப்பேறின் போது குழந்தை இறந்தால், மனஅளவில் பாதிக்கப்பட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு விடுப்பாக 60 நாட்கள் விடுமுறை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய நல்லாட்சி சீர்திருத்தம் காரணமாக, பெண்களுக்கு உகந்த பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, மற்றும் ஓய்வூதிய துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ஊழியர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசிய ஜிதேந்திர சிங், ஊழியர் நலன் மற்றும் ஓய்வூதியத்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வாய்ப்புகளை மத்திய அரசு வேலைவாய்ப்பில் உருவாக்கி இருப்பதாக குறிப்பிட்டார். மகப்பேறின்போது குழந்தை இறக்கும்பட்சத்தில் மனஅளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சிறப்பு மகப்பேறு விடுப்பாக 60 நாட்கள் வழங்க மத்திய அரசு தற்போது முடிவு செய்திருக்கிறது.

குழந்தை பராமரிப்பு விடுமுறையை பொறுத்தவரை 730 நாட்கள் வழங்கப்படும் நிலையில், இந்த விடுமுறையின் போது விடுமுறை பயணச் சலுகையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த விடுமுறையின் போது வெளிநாட்டுப் பயணத்திற்கான சலுகைகளையும் அதிகாரிகள் வழங்க முன்வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையை பராமரிப்பதற்கான விடுமுறை சலுகையை 15 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைக்கும் விதியான 43சி-ஐ, பெண்களின் நலன் கருதி நீக்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளி பெண்கள் தங்கள் குழந்தையை பராமரிக்க ஏதுவாக அவர்களது அகவிலைப்படியில் 25 சதவீதத் தொகையாக, மாதம் 3 ஆயிரம் ரூபாய் சிறப்புப் படியாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதனை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கும் திட்டத்தை, கடந்த 2022 ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியிருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.