இந்தியா

2022-ல் மட்டும் இலங்கைக்கு ரூ.27 ஆயிரம் கோடி நிதி உதவியை வழங்கியது இந்தியா!

Sinekadhara

2022-ல் மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது; மேலும் இலங்கை பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளித்து வருகிறது. மேலும் இந்திய அரசு அண்டை நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கையில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை அரசுக்கு இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை இந்திய அரசு வழங்கியுள்ளது.

இவை தவிர, உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசியப் பொருட்களையும் இலங்கையில் நிலவும் பற்றாக்குறையை தணிக்கக்கூடிய வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.