இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வில்லை

webteam

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் வரை அகவிலைப்படி உயர்த்தப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த இரு அரையாண்டுகளுக்கும், அதாவது 2021 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயர்வும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்றரை ஆண்டு காலத்துக்கு அதாவது இந்த ஆண்டு ஜனவரி முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரை, தற்போதுள்ள அகவிலைப்படி மட்டுமே வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த காலங்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு ஏதும் மொத்தமாக அளிக்கப்படாது எனவும் நிதி அமைச்சகம் கூறியுள்ளது.