ஊரடங்கை மீறுவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்டவைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், பயணிகளின் ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பல்வேறு மாவட்டங்களையும் முடக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்தவகையில், தமிழகத்தை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 3 மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஊரடங்கை மீறுவோர் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.