இந்தியா

இ.எம்.ஐ. -ன் வட்டிக்கு வட்டியா?: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.!

இ.எம்.ஐ. -ன் வட்டிக்கு வட்டியா?: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.!

JustinDurai

கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட கடன் மாதத் தவணைகள் மீதான வட்டிக்கு வட்டி விதிப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாதாந்திர கடன் தவணைகளுக்கான வட்டிக்கு, வட்டி விதிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கொரோனா காலத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாதாந்திர கடன் தவணைகளுக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு‌ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

வட்டிக்கு வட்டி வசூலிப்பதை ரத்து செய்யும் பிரிவுகளில் தனிநபர் கடன், கல்விக்கடன், வாகனக்கடன், வீட்டுக்கடன், கிரெடிட் கார்டில் க‌டன் பெற்றது, சிறு, குறு, தொழில் கடன் ஆகியவைகள் அடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 6 மாதங்களில் சரியாக தவணை செலுத்தியவர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

முன்னதாக, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் தெரிவித்திருந்தன. அப்போது இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.

இதையடுத்து இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள முன்னாள் தலைமை கணக்கு அதிகாரி ராஜீவ் மெகரிஷி தலைமையில் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது. அந்தக் குழு வழங்கியுள்ள பரிந்துரைகள ஏற்றுக்கொண்டு மத்திய அரசு தன் முடிவை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.