வளர்ப்பு நாய்கள்
வளர்ப்பு நாய்கள் PT WEB
இந்தியா

23 வகையான நாய்களுக்குத் தடை விதித்த மத்திய அரசு; பதாகைகளுடன் களமிறக்கப்பட்ட நாய்கள்!

விமல் ராஜ்

செய்தியாளர் - செ.சுபாஷ்

பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் உட்பட மொத்தம் 23 வகை ஆபத்தான நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மார்ச் 12 தேதியில் மத்திய அரசு எழுதிய கடிதத்தில், “ஏற்கெனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வரும் சில இன நாய்கள் மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையினர் அந்த இன நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்துவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட 23 வகை நாய் இனங்கள் :

  1. பிட்புல் டெரியர் (Pitbull Terrier),

  2. டோசா இனு (Tosa Inu),

  3. அமெரிக்கன் ஸ்டாஃப்ஃபோர்ட்ஷயர் டெரியர் (American Staffordshire Terrier),

  4. ஃபிலா பிரசிலிரோ (Fila Brasileiro),

  5. டோகோ அர்ஜெண்டினோ (Dogo Argentino),

  6. அமெரிக்கன் புல்டாக் (American Bulldog),

  7. போயஸ்போல் (Boesboel),

  8. காங்கல் (Kangal),

  9. மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய் (Central Asian Shepherd Dog),

  10. காக்கேசிய ஷெப்பர்ட் நாய் (Caucasian Shepherd Dog),

  11. தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய் (South Russian Shepherd Dog),

  12. டோர்னஜாக் (Tornjak),

  13. சார்ப்ளானினாக் (Sarplaninac),

  14. ஜப்பானிய டோசா மற்றும் அகிதா (Japanese Tosa and Akita),

  15. மாஸ்டிஃப் (Mastiffs),

  16. ராட்வெய்லர் (Rottweiler) டெரியர்கள் (Terriers),

  17. ரோடேஷியன் ரிட்ஜ்பேக் (Rhodesian Ridgeback),

  18. ஓநாய் நாய்கள் (Wolf Dogs),

  19. கனாரியோ (Canario),

  20. அக்பாஷ் (Akbash),

  21. மாஸ்கோ காவல் நாய் (Moscow Guard Dog),

  22. கேன் கோர்சோ (Cane Corso) மற்றும்

  23. பேன்நாய் (Bandog).

எதன் அடிப்படையில் தடை?

இந்த முடிவு, மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த இன நாய்கள் ஆக்ரோஷமானவை, சில நேரங்களில் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடியவை, குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் இந்த வகை நாய்களின் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு, விலங்கு நலக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை நாய்களை விற்பனை செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் அல்லது அனுமதி வழங்க வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அளவிலான கால்நடை பராமரிப்புத் துறைகளை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் வளர்ப்பு நாய்களின் வீடியோவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி திருப்பரங்குன்றம் படப்படித்தெருவில் வசித்து வருபவர் மோகன்தாஸ். இவருடைய வீட்டில் ராட்வீலர் மற்றும் நாட்டு நாய் ஒன்றைச் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்.

மத்திய அரசு 23 நாய்களுக்குத் தடை விதித்துள்ள செய்தி வெளியானதை கண்ட மோகன்தாஸ், தன் வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளின் கழுத்தில்

"Modi Ji, What is This?"

என்ற தலைப்பில்.. பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில்,

"எங்களுக்கும் சிஏஏ சட்டமா.? PLEASE STOP BAN. தயவு செய்து தடைசெய்யாதீர்கள்.

- இப்படிக்கு ராட்வில்லர், புல்டாக், பிட்புல், டெரியர்”

என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தொங்கவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அதை சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வெளியிட்டும் உள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிஏஏ சட்டம் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட நிலையில், “எங்களுக்கும் சிஏஏ சட்டமா?” என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வளர்ப்பு நாய்கள் கழுத்தில் அணிந்து கொண்டு நின்றது, வேடிக்கையாகவும் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.