இந்தியா

ரமலான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வா? - சு.வெங்கடேசன் எம்.பி எதிர்ப்பு

Veeramani

இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகையின்போது சிபிஎஸ்இ தேர்வுகள் நடத்தப்படக்கூடிய சூழல் இருப்பதால் தேர்வுத் தேதியை மாற்றவேண்டும் என்று  மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்திருக்கிறார்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சிபிஎஸ்இ இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்த ஆண்டு மத்திய மாநில அரசுகள் மே மாதம் 14-ஆம் தேதி ரமலான் திருநாள் விடுமுறை அறிவித்திக்கிறது. ஆனால், ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறும். இதனால் ரமலான் திருநாள் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இதை கணக்கில் கொள்ளாமல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 13 மற்றும் மே 15 தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய மாணவர்களை அவர்களுக்கு முக்கியமான திருநாள் அன்று தேர்வு எழுத நிர்ப்பந்திப்பது சி.பி.எஸ்.இ-க்கு அழகல்ல. ஆகவே, அத்தகைய நெருக்கடி வராமலிருக்க இப்போதே தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.