சிபிஎஸ்இ வினாத்தாள் Pt web
இந்தியா

சிபிஎஸ்இ வினாத்தாள்.. ஆங்கிலப் பாடலுக்கு சென்ற QR குறியீடு.. பெற்றோர்கள் அதிர்ச்சி.!

சிபிஎஸ்இ கணிதத் தேர்வு வினாத்தாளில் கொடுக்கப்பட்ட க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, அது பிரபல ஆங்கில பாடல் ஒன்றிற்கு செல்வதாக சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று பரவிய நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகம் தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளது.

Premkumar S

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வை 18.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்த சூழலில் தான், நேற்று (மார்ச் 9) கணிதத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்த பிறகு, கொடுக்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கியூ ஆர் குறியீட்டை மாணவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அது பிரபல பாப் பாடகர் ரிக் ஆஸ்ட்லியின் 'Never Gonna Give You Up' என்ற பாடலுக்கு அழைத்துச் சென்றது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுவாக அந்த க்யூ.ஆர் குறியீடுகள், வினாத்தாளின் அதிகாரப்பூர்வத் தன்மை மற்றும் பாதுகாப்புக்காக உருவாக்கப்படுகிறது.

சிபிஎஸ்இ மாணவர்கள்

இந்த சூழலில் தான், ஆங்கிலப் பாடல் ஒன்றின் யூடியூப் காணொளிக்குச் சென்ற சம்பவம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இத்தேர்வில் ஏதாவது குளறுபடிகள் நடந்துள்ளதா.? வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதா.? என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

இந்நிலையில், இச்சம்வத்தைக் குறிப்பிட்டு "மோடி அரசாங்கமும் அதன் திறமையற்ற அமைப்பும் குழந்தைகளின் கல்வி குறித்து எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி" என்று காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் ஒரு 'ஜோக்' என்றும் சாடியுள்ளது.

இதைத் தொடர்ந்து, இன்று விளக்கமளித்து சிபிஎஸ்இ நிர்வாகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், கணிதத் தேர்வு வினாத்தாள்கள் முற்றிலும் உண்மையானவை எனவும் அதன் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, கியூ.ஆர் குறியீடுகள் வினாத்தாளின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவே கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம், சில பகுதி வினாத்தாள்களில் உள்ள கியூ.ஆர் குறியீடுகள் ஆங்கிலப்பாடலுக்கு செல்கின்றன. இதுபோன்ற தொழில்நுட்பக் குளறுபடிகள் எதிர்காலத் தேர்வுகளில் நடக்காமல் இருக்கத் தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.