இந்தியா

2ஜி வழக்கில் டிச.21-ம் தேதி தீர்ப்பு

webteam

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2ஜி ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக 2010 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பு வாதங்களும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி நிறைவுற்றது. தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2ஜி வழக்கில் அக்டோபர் 25 ஆம் தேதி அல்லது அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார்.

இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அறிவிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தாமதம் ஏற்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இன்று தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார்.