இந்தியா

பரபரப்பான டெல்லி சாலையில் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு - இரு சகோதரர்கள் படுகாயம்

Veeramani

மேற்கு டெல்லியில் உள்ள சுபாஷ் நகரின் பரபரப்பான சாலையில் நேற்று மாலை மூன்று நபர்கள் ஒரு காரைச் சுற்றி வளைத்து 10 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு சகோதரர்கள் படுகாயமடைந்தனர்.

கேஷோபூர் மண்டியின் முன்னாள் தலைவர் அஜய் சௌத்ரி மற்றும் அவரது சகோதரர் ஜஸ்ஸா சவுத்ரி ஆகிய இருவர் மீது இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாகவும், அவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த காட்சிகளை கொண்டு  துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக பகிரப்பட்ட ஒரு நிமிட வீடியோவில், நெரிசல் அதிகம் உள்ள சுபாஷ் நகரில் இருவர் துப்பாக்கியுடன் வருவதைக்கண்டு அவ்வழியாகச் செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ரிக்‌ஷா ஓட்டுநர்கள் ஓடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. வெள்ளை நிற கார் மீது அவர்கள் வேகமாக துரத்தி சென்று துப்பாக்கி சூடு நடத்தும்போது பின்னால் பல கார்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சில கார்கள் அப்பகுதியை விட்டு திரும்பும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.