குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, முன் அனுமதியின்றி பேரணியில் ஈடுபட்டு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருமாவளவன், ஜோதிமணி
உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் புத்தாநத்தத்தில் கடந்த 24-ந் தேதி குடியுரிமை திருத்தச் சட்டம், என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் புத்தாந்தம் ஜமாத் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் முன் அனுமதி இன்றி பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக புத்தாநத்தம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்தார்.
அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், கரூர் எம்.பி. ஜோதிமணி, மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, திமுக மாநில மகளிரணி துணை செயலாளர் கவிஞர் சல்மா, ஜமாத் தலைவர் ரகமத்துல்லா மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட 3,000 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 143, 341, 188 ஆகிய பிரிவுகளின் கீழ் புத்தாநத்தம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.