டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் நடைபெற்ற நீதிமன்ற விவாதங்களை அனுமதியின்றிப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்ளிட்டோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஏப்ரல் 13, 2026 அன்று, நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா இந்த வழக்கில் இருந்து விலகக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி வாதாடினார்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதங்களைச் சட்டவிரோதமாக வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பியதாக வழக்கறிஞர் வைபவ் சிங் புகார் அளித்துள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தின் 'வீடியோ கான்பரன்சிங் விதிகள்-2021' மற்றும் 'மின்னணு சான்றுகள் விதிகள்-2025'-ன் படி, நீதிமன்ற விவாதங்களை அனுமதியின்றிப் படம்பிடிப்பதோ அல்லது வெளியிடுவதோ கடும் குற்றமாகும்.
இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல; நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கவும், நீதிபதிக்கு அழுத்தம் கொடுக்கவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு "சதி" என்று மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.