இந்தியா

ஓபிஎஸ் மகன் தொடர்ந்த வழக்கு... உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

தனது தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடைகோரிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது தேர்தல் வெற்றியைச் ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

தேர்தல் வழக்குத் தொடர்வதற்கான உரிய வழிமுறைகளைக் கடைபிடிக்காமல் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தனியாக மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மனுவை நிராகரித்ததோடு தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என உத்தரவு இட்டிருந்தது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ரவீந்திரநாத் தாக்கல் சொந்த மேல்றையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போதைய நிலையில் இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.