டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் திடீர் ராஜினாமா செய்துள்ளார். 2022 ஜூலையில் பொறுப்பேற்ற அவர், 2027 வரை பதவியில் இருக்க வேண்டிய நிலையில் முன்கூட்டியே விலகியிருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா செய்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை மாதம் பொறுப்பேற்ற வில்சனின் பதவிக்காலம் 2027இல் நிறைவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே விலகியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, வில்சன் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வந்தார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் வில்சன்(55), விமானப் போக்குவரத்துத் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். இவர், இதற்குமுன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமானச் சேவை நிறுவனத்தில் செயல் அதிகாரியாக பணியாற்றியவர். ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இல்கர் அய்சி தலைமைப் பதவியை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் விலசன் நியமிக்கப்பட்டார்.
கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா செய்தது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.