மேற்குவங்க மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெறவிருந்த ரத யாத்திரைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
மேற்குவங்கத்தின் மூன்று இடங்களில் ரத யாத்திரை தொடங்க பாஜக திட்டமிட்டது. இந்த ரத யாத்திரையை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்க இருந்தார். ஆனால், இந்த யாத்திரைக்கு திரிணாமூல் அரசு அனுமதி வழங்கவில்லை. யாத்திரையால் மதக் கலவரம் ஏற்படும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ரத யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை நாடியது. தனிநபர் தலைமையிலான அமர்வு நேற்று பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதை விடுத்து தேவையற்ற காரணங்களை அரசு கூறுகிறது என நீதிபதி தபப்ரதா சக்ரபர்தி தெரிவித்தார்.
இதனையடுத்து, தனி நீதிபதி அமர்வின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது, இந்த யாத்திரையால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து உளத்துறை அதிகாரிகள் தரப்பில் பெறப்பட்ட தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மேற்கு வங்க அரசின் வழக்கறிஞர் வாதாடினர். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தேபசிஷ் கர்குப்தா மற்றும் நீதிபதி ஷம்ப சர்கார் பாஜகவின் ரத யாத்திரைக்கு தடைவிதித்தது. அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து நீதிபதிகள் இந்த உத்தரவு பிறப்பித்தனர்.
முன்னதாக, டிசம்பர் 7ம் தேதி யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அனுமதி வழங்கவில்லை. அதனையடுத்து, டிசம்பர் 28 முதல் 31ம் தேதி வரை யாத்திரை நடத்த பாஜக முயற்சித்தது. ஆனால், நீதிமன்றம் அந்த யாத்திரைக்கு தடைவிதித்துள்ளது.