இந்தியா

'ByeByeModi' என்ற வாசகத்துடன் பேனர்! - வருகைக்கு 2 நாள் முன்பே ஹைதராபாத்தில் பரபரப்பு

JustinDurai

பிரதமர் நரேந்திர மோடியின் ஐதராபாத் வருகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் '#ByeByeModi'  என்ற வாசகத்துடன் பேனர் வைத்தது அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜூலை 2 மற்றும் 3ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள், நிர்வாகிகள் என பலர் பங்கேற்பார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் ஒரு திரையரங்கு முன்பாக '#ByeByeModi' என்ற வாசகம் இடம்பெற்ற பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை கிளப்பியது. இந்த பேனரில் வேளாண் சட்டங்கள், அக்னிபாத் திட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பான வரிகள் இடம்பெற்றிருந்தது. மோடியின் ஐதராபாத் வருகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்  '#ByeByeModi'  என்ற வாசகத்துடன் வைக்கப்பட்ட பேனர் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று அந்த பேனர் அகற்றப்பட்டது.

இதையும் படிக்கலாம்: உதய்பூர் கொலையாளிகளுக்கு பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு - விசாரணையில் அம்பலம்