இந்தியா

தபால் நிலையங்கள் மூலம் வீடு தேடிவரும் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம்..!

kaleelrahman

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் முதன்முறையாக வீடு தேடி வருகிறது. வீட்டருகில் உள்ள தபால் நிலையங்களில் முன்பதிவு செய்ய வேண்டும்.


கொரோனா நோய் பரவல் காரணமாக பல கடும் கட்டுப்பாடுகளுடன் சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, கடந்த 16-ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக வெர்ச்சுவல் க்யூ மூலம் முன் பதிவு செய்த பக்தர்கள் தினசரி 1,000 பேரும் சனி, ஞாயிறுகளில் 2,000 பேரும் சிறப்பு பூஜை நாட்களில் 5,000 பக்தர்கள் என முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக் காலமான 60 நாட்களுக்கான இந்த முன்பதிவு, துவங்கிய இரண்டு நாட்களிலேயே முடிந்துவிட்டது. இது நாடுமுழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.


இந்நிலையில், கொரோனா கால முன்பதிவை தவறவிட்டு, தரிசன அனுமதி கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்காக தபால்துறையும், தேவஸ்வம்போர்டும் இணைந்து முதன்முறையாக சபரிமலை ஐயப்பன் கோயில் அரவணை, பாயாசம், அப்பம் பிரசாதம், நெய், விபூதி, குங்குமம், மஞ்சள், அர்ச்சனை பிரசாதம் அடங்கிய தொகுப்பை, சபரிமலை சன்னிதானத்தில் உள்ள தபால் அலுவலகம் மூலமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதற்காக, சபரிமலை பிரசாதம் தேவைப்படும் நாடு முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் தங்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் சென்று, ஐயப்பன் கோயில் பிரசாதத்திற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து 450 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும், பிரசாதம் வீடு தேடி வரும் என சன்னிதானம் தபால்நிலைய அதிகாரி நவீன் பிரசாத் தெரிவித்தார். ஒருவர் 10 பிரசாத தொகுப்புகளை பெறவும் அனுமதி உள்ளது.


தவிர சன்னிதானம் தபால் நிலையத்தில், வழக்கமான ஸ்பீட் போஸ்ட், பார்சல், இஎம்ஓ., வசதிகளோடு, சபரிமலை ஐயப்பன் படம் பொறித்த கவர், பக்தர்கள் தங்கள் படம் பொறித்த “மை ஸ்டாம்ப்” ஆகிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.