ஐபோன் 17-ஐவிட அதிக விலையுள்ள ஒரு போனை பிஎஸ்என்எல் நிறுவனம், அறிமுகப்படுத்தியிருப்பதுதான் இந்திய பயனர்களை மட்டுமல்ல, உலகையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறவனமான பிஎஸ்என்எல் (BSNL), நாடு முழுவதும் தனது தரைவழி வலையமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் நிலையில், மொபைல் டவர்கள் இல்லாத இடங்களில் மக்கள் தொடர்பில் இருக்க உதவும் வகையில், புதிய செயற்கைக்கோள் தொலைபேசி (Satellite Phone) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சாதாரண ஸ்மார்ட்போனைப் போலல்லாமல், இந்த சாதனம் வழக்கமான செல்லுலார் நெட்வொர்க்குகளுக்குப் பதிலாக செயற்கைக்கோள்களைப் பயன்படுத்திச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சாதனம், இன்மார்சாட் (Inmarsat) செயற்கைக்கோள் நெட்வொர்க் மூலம் நேரடியாக இணைக்கப்படுவதால், அடர்ந்த காடுகள் அல்லது மலைப் பிரதேசங்களிலும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளைப் பெறமுடியும்.
சவாலான மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைகளைத் தாங்கும் வகையில் மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், மின்சார வசதி இல்லாத இடங்களில் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் சிறப்பான பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது. ஆபத்தான அவசர காலங்களில் மீட்புக் குழுவினருக்கு உடனடியாக எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. இதனால், வழக்கமான மொபைல் இணைப்பு கிடைக்காத தொலைதூர மற்றும் மின்சார வசதியற்ற இடங்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.
இந்த செயற்கைக்கோள் தொலைபேசியின் விலை ரூ. 1,34,166 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இது யார் வேண்டுமானாலும் எளிதாக வாங்கிப் பயன்படுத்தக்கூடிய சாதனம் அல்ல. பயனர்கள் இந்தத் தொலைபேசியை வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து (DoT) தெளிவான அங்கீகாரத்தைப் பெற வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்த போனை எந்த இடத்தில், எவ்வளவு காலம், மற்றும் என்ன காரணத்திற்காகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற விவரங்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன்மூலமே, அந்த தொலைபேசி பயனருக்கு வழங்கப்படும். தேவையான அங்கீகாரம் இல்லாமல் செயற்கைக்கோள் தொலைபேசியை வைத்திருப்பது அல்லது இயக்குவது இந்திய விதிமுறைகளின்படி சட்டரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆகையால், இந்தச் சேவையைப் பெற விரும்புவோர் அருகிலுள்ள BSNL அலுவலகத்திற்குத் தொடர்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.