இந்தியா

’’11 லட்சம் வேண்டாம், 11 ரூபாய் போதும்’: வரதட்சணையை மறுத்த பாதுகாப்பு வீரருக்கு குவியும் பாராட்டு!

webteam

பெண் வீட்டார் கொடுத்த வரதட்சணையை வாங்க மறுத்த எல்லை பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஜிதேந்திர சிங். எல்லை பாதுகாப்புப் படை வீரர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சல் செகாவத் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அப்போது மணமகளின் தந்தை மணமகன் கையில் 11 லட்சம் ரூபாயை வரதட்சணையாகக் கொடுத்தார். ஆனால், அதை சிங் ஏற்க மறுத்தார். இதனால் மணமகள் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். திருமண ஏற்பாட்டில் குறை ஏதும் வைத்துவிட்டதற்காக, இப்படி செய்கிறார்களோ என்று வருந்தினர். 

ஆனால், ஜிதேந்திர சிங், ‘வரதட்சணை வாங்கக் கூடாது என்பது என் பாலிசி, வெறும் 11 ரூபாயும் ஒரு தேங்காயும் மட்டும் கொடுங்க’ என்று வாங்கிக்கொண்டார். இதையடுத்து திருமண வீடு மகிழ்ச்சியால் நிறைந்தது.

இதுபற்றி ஜிதேந்திர சிங் கூறும்போது, ’’சஞ்சல், சட்டப் படிப்பில் பிஎச்டி படித்துவருகிறார். எனக்கும் என் குடும்பத்துக்கும் அது போதும் என்று நினைத்தேன். சஞ்சல் படிப்பை முடித்தபின், நாளை மாஜிஸ்திரேட் வேலைக்குச் சென்றால், அது பணத்தை விட எனக்கு பெரிய விஷயம்தானே’’ என்றார்.