இந்தியா

இன்று இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - அவரின் பயணத்திட்டம் என்ன?

Veeramani

அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேராக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் இருந்து, தங்கவிருக்கும் ஹோட்டல் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக வழியெங்கும் அவரை வரவேற்கும் வகையில் நடனக் குழுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரையிலான 4 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 40 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், வழியெங்கும் அவரை வரவேற்க சுமார் 20 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



அகமதாபாத் நகர் வந்தடைந்ததும் போரிஸ் ஜான்சன் முதலில் காந்தி ஆசிரமத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன்பின், குஜராத்தின் உயிரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை பார்வையிடுகிறார். பின்னர் காந்திநகர் சென்று அக்ஷர்தாம் கோயிலில் வழிபாடு நடத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வதோதரா நகர் அருகே ஹலோல் என்ற இடத்தில் உள்ள ஜேசிபி தயாரிக்கும் ஆலைக்கும் செல்கிறார்.

குஜராத்தின் முன்னணி தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகள் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.