model image
model image freepik
இந்தியா

மாத்திரை உட்கொண்டு அதிகளவு பாலியல் துன்புறுத்தல்; மோசமான மணப்பெண் உடல்நிலை..மரணத்தில் முடிந்த சோகம்!

Prakash J

கல்யாணம் என்பது இருமணங்கள் மட்டும் இணைவதில்லை. இருவீட்டாரில் உள்ள பல உறவுகள் இணைகின்றன. அதனால்தான் அந்தக் கல்யாணத்தை உற்றார், உறவினர்கள் ஒன்றுகூடி பார்த்துப் பார்த்து நடத்துகிறார்கள். ஆக, கல்யாணம் என்பது அதை ஏற்றுக்கொள்ளும் உறவுகளுக்கு ஒரு கனவாக இருக்கிறது. அந்தக் கனவில் நிறைய சந்தோஷங்களும் எதிர்பார்ப்புகளும் கூடியிருக்கின்றன. அப்படியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியபடியே உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இளம்தம்பதியும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தனர். ஆனால், அந்தக் கனவு, களிப்பு எல்லாம் 2-3 நாளில் முடிவுக்கு வந்ததுதான் அம்மாநிலத்தையே பேச வைத்துள்ளது.

உத்தரப்பிரதேசம் ஹமிர்பூரைச் சேர்ந்தவர் அந்த மணமகன். இவருக்குத்தான் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்தப் பெண்ணுக்கு பெற்றோர் யாரும் கிடையாது. அவரது ஒரே சகோதரர் மட்டும்தான். அரசு ஊழியரான அவர், தன் சகோதரி விருப்பப்படியே அந்தத் திருமணத்தைத் தடபுடலாக நடத்தியுள்ளார். அவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்குப் பிறகு முதல் இரவுக்காக தம்பதிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் மணமகன் ஆண்மையை அதிகரிக்கும் வகையில், அதற்கான மாத்திரைகளை மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துள்ளார். அவர் மாத்திரைகளை உபயோகித்ததன் விளைவு, அந்தப் பெண்ணை பாலியல்ரீதியாக அதிகளவில் துன்புறுத்தியுள்ளார். இதில் அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. தொடர்ந்தும் அதே பாதிப்பு அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணின் உடல் மிகவும் மோசமானதை அடுத்து, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்களே அவரது உடல்நிலையைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ளனர். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அளவுக்கு, அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமான நிலைமையில் இருந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

முதலிரவின்போது பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்கும் மாத்திரைகளை உட்கொண்டு உடலுறவில் ஈடுபட்டதால், பெண்ணுக்கு படுமோசமான காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி கடந்த 10ஆம் தேதி இறந்துவிட்டார். இதுகுறித்து மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மணமகளின் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அதற்குள் மணமகன் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் கிராமத்தைவிட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.