இந்தியா

”இத்தனை பேர் முன்னாடி இப்படியா பண்றது?” - முத்தமிட்ட மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

JananiGovindhan

மணமேடை வரை சென்ற பிறகு நின்றுப் போன திருமணங்கள் குறித்து கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் ஏராளமான விருந்தினர்கள் முன்பு மணமகன் முத்தமிட்டதால் மணமகள் திருமணத்தையே நிறுத்திய சம்பவத்தை கேள்விப்பட்டதுண்டா? அப்படியொரு சம்பவம்தான் உத்தர பிரதேசத்தில் நடந்திருக்கிறது.

கடந்த செவ்வாயன்று (நவ.,28) வரமாலை சடங்கு முடிந்த பிறகு 300க்கும் மேலான விருந்தினர்கள் முன்னிலையில் மணமகளை மணமகன் முத்தமிட்டிருக்கிறார். இதனால் கடுப்பான அந்த 23 வயது மணப்பெண் மணமேடையில் இருந்து வெளியேறி போலீசுக்கு ஃபோன் மூலம் புகார் கொடுத்திருக்கிறார்.

அப்போது அந்த மணப்பெண், “மணமகன், அவருடைய நண்பர்களிடம் கட்டிய பந்தயத்தில் வெற்றிப் பெறுவதற்காக விருந்தினர்கள் முன்பு என்னை முத்தமிட்டார். இது அவர் மீதான சந்தேகத்தை வரவைத்திருக்கிறது” என கூறியிருக்கிறார். இதுபோக, அந்த மணமகன் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் இதனை முதலில் தான் தடுத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ALSO READ: 

இதனையடுத்து பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரை போலீசார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு, “அவர் என்னை முத்தமிட்டபோது எனக்கு அவமானமாக இருந்தது. என்னுடைய சுய மரியாதை குறித்த எந்த கவலையும் இல்லாமல் அத்தனை பேர் முன்னிலையிலும் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டார்” என மணப்பெண் கூறியதாக IANS செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்துவைக்க போலீசார் முயன்றும், திருமணத்தை நிறுத்துவதில் மணப்பெண் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். ஆகையால் திருமணம் தடைப்பட்டிருக்கிறது. இதுகுறித்து பேசியுள்ள மணப்பெண்ணின் தாயார், “மணமகனை அவரது நண்பர்கள்தான் தூண்டிவிட்டிருக்கிறார். எங்கள் மகளை சமாதானம் செய்ய முயற்சித்தோம். ஆனால் அவரை கல்யாணம் செய்துக்கொள்ள மறுத்துவிட்டார். கொஞ்சம் நாட்களுக்கு காத்திருப்பதாக முடிவெடுத்திருக்கிறோம்” என்றிருக்கிறார்.

“சம்பவம் நடந்த நேரத்தில் எல்லா சடங்குகளும் முடிந்திருந்தபடியால் அவர்களுக்கு திருமணம் நடந்த முறைதான். ஆனாலும் இந்த விவகாரத்தின் சூடு குறையும் வரை காத்திருக்கலாம் என நினைக்கிறோம்” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ALSO READ: