தனது உடலை மலைப்பாம்பு சுற்றி வளைத்தபோது துணிச்சலுடன் போராடி உயிர் தப்பித்துள்ளார் 10 வயது சிறுவன்.
கர்நாடாகாவில் உள்ள ஊர்வா என்கிற கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருபவர் சங்கல்ப் ஜி பாய். கடந்த புதன்கிழமை மாலை அன்று தனது வீட்டின் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, கழிவுநீர் குழாயிலிருந்து வெளியே வந்த மலைப்பாம்பு ஒன்று சிறுவனின் வலது காலை கவ்வி பிடித்துக் கொண்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் சத்தமிட்டு உதவிக்கு அளித்துள்ளான். ஆனால் அங்கே யாருமில்லாததால் சிறுவன் தனியாக மலைப்பாம்பின் பிடியில் சிக்கியுள்ளான். இதையடுத்து மனதில் தைரியம் வரவழைத்து பாம்புடன் பலமாக போராடியும், காலால் உதைத்தும் பாம்பை பின்வாங்கச் செய்துள்ளான். இதனால் பாம்பு சிறுவனின் காலை விடுவித்து மீண்டும் கழிவுநீர் குழாய்க்குள் புகுந்து கொண்டது.
காயத்துடன் ஊருக்குள் வந்த சிறுவன் மக்களிடம் பாம்பு தன்னை சுற்றி வளைத்தது குறித்து தகவல் தெரிவித்தான். இதையடுத்து பாம்பு பிடிக்கும் தன்னார்வலர் ஒருவர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். தற்போது அந்த பாம்பு பிலிகுலா உயிரியல் பூங்காவில் விடப்பட்டுள்ளது.
தனது மகனின் பாம்பு கடித்த காயம் குணமடைந்து வருவதாக சிறுவனின் தந்தை கோபாலகிருஷ்ண பாய் தெரிவித்துள்ளார். சிறுவனின் இந்த துணிச்சலான செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.