Opposition parties protest
Opposition parties protest pt desk
இந்தியா

மணிப்பூர் விவகாரம்: பிரதமர் விளக்கமளிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு

webteam

மணிப்பூர் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரண்டாவது நாளாக மக்களவை இன்றும் முடங்கியுள்ளது. மாநிலங்களவையும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் தரப்பில் “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையிலே பதிலளிக்க வேண்டும். வன்முறை ஏன் இன்னும் தொடர்கிறது? பெண்களுக்கு நேர்ந்த வன்கொடுமையை தடுக்கத் தவறியது ஏன் என விளக்கமளிக்க வேண்டும்” என வலியுறுத்தி வருகிறார்கள். இப்போராட்டம் நேற்றை விட இன்று வலுப்பெற்றுள்ளது.

parliment

இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள். இதேபோல அடுத்தடுத்த நாட்களிலும் நடைபெற்றால் நாடாளுமன்றத்தை நடத்துவது என்பது அரசுக்கு மிகவும் கடினமாகிவிடும்.

இதற்கிடையே மத்திய அமைச்சர்கள் பலரும், “நாங்கள் மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்தத் தயார். எதிர்க்கட்சிகள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அவைத் தலைவர்கள் நேரமளிக்கும் போது அவர்கள் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்களோ, அதன்படி நாம் விவாதத்தை நடத்தலாம்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிப்பார். இரண்டு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்வார்” என தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மீண்டும் மீண்டும் இரு அவைகளிலும் இந்த விஷயத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக் கொள்வதாக இல்லை.

Manipur violence

பிரதமர் நேரடியாக இரு அவைகளிலும் விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள். ஆகவே இன்று நாள் முழுவதும் மக்களவை முடிங்கியுள்ளது. அதாவது திங்கட்கிழமை காலை 11 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் கூட்டத்தொடர் தொடர்ந்து நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.