மனோஜ் ஜராங்கே, மும்பை உயர்நீதிமன்றம் PTI, HT, X Page
இந்தியா

மராத்தா போராட்டம்.. கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்.. களத்தில் குதித்த போலீஸார்!

மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக ஆசாத் மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Prakash J

மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் உடனடியாக ஆசாத் மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே, இடஒதுக்கீடு கோரி கடுமையாகப் போராடி வருகிறார். அவ்வப்போது உண்ணவிரதப் போராட்டங்களையும் நடத்தி வருகிறார். அரசியல் தலைவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதை அவ்வப்போது கைவிடுவார். கடந்த ஆண்டு இறுதியில், அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் மும்பையையே ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில், மராத்தா இடஒதுக்கீட்டுப் பிரச்னையில் மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மனோஜ் ஜராங்கே கடந்த ஆகஸ்ட் 29 முதல் மும்பையின் ஆசாத் மைதானத்தில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இடஒதுக்கீடு போராட்டம் இன்றுடன் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுகளின் பேரில், தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு இந்த விஷயத்தில் சட்டக் கருத்தைப் பெறப்போவதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை என மனோஜ் ஜராங்கே தெரிவித்துள்ளார்.

மராத்தா போராட்டம்.. அரசு சொல்வது என்ன?

மராத்தா போராட்டம்

மறுபுறம், மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 'குன்பி' சாதிச் சான்றிதழ் வழங்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 'குன்பி' சான்றிதழ் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வரும் அமைச்சரவைக் குழு, கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது. இதற்கிடையே போராட்டம் தொடர்பாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தெற்கு மும்பையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், நீண்டகால சேதங்களிலிருந்து வணிகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அல்லது உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில், மும்பை ஆசாத் மைதானத்தில் மராத்தா இடஒதுக்கீட்டு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் மூலம் சட்டத்தை மீறியதாகக் கூறி, மும்பை உயர் நீதிமன்றம் இன்று அவர்களை கடுமையாகக் கண்டித்தது. போராட்டக்காரர்கள் உடனடியாக மைதானத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ”50,000க்கும் மேற்பட்டோர் கூடியது முற்றிலும் சட்டவிரோதமானது” என்று கூறிய பொறுப்பு தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் நீதிபதி ஆர்த்தி சாத்தே ஆகியோர் அடங்கிய அமர்வு, ”இயல்புநிலையை மீட்டெடுக்க பிற்பகல் 3 மணிக்குள் நகரத்தை காலி செய்ய வேண்டும்” என்றும் உத்தரவிட்டது. அதேநேரத்தில், போராட்டத்தைக் கையாள்வதில் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் தரப்பில் குறைபாடு இருப்பதையும் அவர்கள் கடுமையாகக் கண்டித்தனர். சட்டம் ஒழுங்கை சமரசம் செய்ய முடியாது என்று கூறிய நீதிமன்றம், இயல்புநிலையை மீட்டெடுக்க அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டது. மேலும், பல போராட்டக்காரர்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி வளைத்து, நீதிபதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

bombay hc

எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள்

இதற்கிடையே, ஆசாத் மைதானத்தில் போராட்டத்தைத் தொடர அனுமதி கோரி ஜராங்கே புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் ஜராங்கே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனேஷிண்டே நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு நீதிமன்றம், அவரது விண்ணப்பத்தின் மீது உத்தரவு வரும் வரை காத்திருந்து, ஆர்வலரும் அவரது ஆதரவாளர்களும் ஆசாத் மைதானத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிக்க முடியாது என்று கூறியது. ”பிற்பகல் 3 மணிக்குள் அவர்களை காலி செய்யச் சொல்லுங்கள், இல்லையெனில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். முன்மாதிரியான குற்றச்சாட்டுகளை சுமத்துவோம் அல்லது அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்குவோம். பிற்பகல் 3 மணிக்குள் முழுமையான இயல்புநிலையை நாங்கள் விரும்புகிறோம், இல்லையெனில் நாங்களே தெருக்களில் இறங்கிப் போராடுவோம்" என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

கண்டிஷனுக்குப் பிறகு கலைந்து செல்ல போராட்டக்காரர்கள் முடிவு

இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றச் சென்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பிற்பகலில் போராட்டக்காரர்களின் வாகனங்களை போலீசார் அகற்றத் தொடங்கினர். இருப்பினும், போராட்டக்காரர்கள் காவல்துறையின் தலையீட்டை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மராட்டிய மக்களுக்கு குன்பி அந்தஸ்து வழங்கும் ஹைதராபாத் வர்த்தமானியை செயல்படுத்துவதற்கான அரசாங்கத் தீர்மானம் (GR) வெளியிடப்படும் என்றும் மாத இறுதிக்குள் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறவும் மாநில அரசு ஒப்புக்கொண்டதை அடுத்து, போராட்டக்காரர்கள் இன்று இரவு 9 மணிக்குள் கலைந்து செல்வதாக அறிவித்துள்ளனர்.

மனோஜ் ஜராங்கே போராடுவது ஏன்?

மராத்தாக்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்ட விவசாய சாதியான குன்பிகளாக அடையாளம் காண வேண்டும் என்றும், இது அவர்களை அரசு வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றும் என்றும் மனோஜ் வலியுறுத்துகிறார். இதையடுத்தே, மராத்தாக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஜராங்கே கோரி வருகிறார். இருப்பினும், இந்த நடவடிக்கை ஓபிசி தலைவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

மனோஜ் ஜராங்கே

நிறைவேற்றப்பட்ட மசோதாவை எதிர்த்து வழக்கு

முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரியில், அப்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசாங்கம் இடஒதுக்கீடு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மனோஜ் ஜராங்காவேயின் மும்பை நோக்கிய பேரணியின்போது உறுதியளிகத்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தபோது, ​​மகாராஷ்டிரா சட்டமன்றம் ஒரு சிறப்பு ஒருநாள் கூட்டத்தொடரை நடத்தியது. அப்போது, மராத்தா சமூகத்தினருக்கு 'சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர்' பிரிவின் கீழ் கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஒருமனதாக அங்கீகரித்தது. ஆனால், இந்த இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.