இந்தியா

பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநர் கைது

webteam

தமிழகத்தின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வதந்தி பரப்பிய லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்

தமிழக காவல்துறையினருக்கு பெங்களூர் காவல்துறையினர் நேற்று ஒரு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பினர். அதில், தமிழகத்தில் ரயில்கள் உள்ளிட்ட  இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்தனர். பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லாரி ஓட்டுநர் சுவாமி சுந்தர மூர்த்தி என்பவர் தகவல் அளித்ததாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், ராமநாதபுரத்தில் 19 பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாம்பன் பாலத்திலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 

இந்நிலையில் வெடிகுண்டு வதந்தி பரப்பிய சுந்தர மூர்த்தியை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். 65 வயதான சுந்தர மூர்த்தி தற்போது லாரி ஓட்டுநராக இருப்பதாகவும், இவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது. வெடிகுண்டு வதந்தி பரப்பியது ஏன் என அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.