இந்தியா

தீவிரவாதிகள் தாக்குதலில் காஷ்மீர் பாஜக பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை!

JustinDurai

ஜம்மு காஷ்மீரின் குல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாஜக பஞ்சாயத்து தலைவர் பலியாகியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருபவர் சஜ்ஜத் அகமது காண்டே. இன்று காலை சஜ்ஜத் அகமது வீட்டை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அகமதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடந்த 48 மணி நேரத்தில் தெற்கு காஷ்மீரில் பாஜக பஞ்சாயத்து உறுப்பினர்கள் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி குல்கம் மாவட்டத்தில் பாஜக பஞ்சாயத்து உறுப்பினர்கள் இருவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.