இந்தியா

கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக தயார் : சதாநந்த கவுடா

webteam

ஆளுநர் அழைப்பு விடுத்தால் ஆட்சிமைக்க பாஜக தயாராக உள்ளது என கர்நாடக பாஜக தலைவர் சதாநந்த கவுடா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஆளுநரே உச்ச அதிகாரம் பெற்றவர். அரசியலமைப்பு ஆணைப்படி அவர் எங்களுக்கு அழைப்பு விடுத்தால், நிச்சயமாக நாங்கள் ஆட்சி அமைக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் தனித்து மிகப்பெரிய கட்சியாக உள்ளோம். எங்களுடன் 105 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜக ஆட்சியமைத்தால் எடியூரப்பா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார்” எனத் தெரிவித்தார். 

முன்னதாக, 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 எம்எல்ஏக்களும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 3 பேரும் ராஜினாமா செய்வதாக தலைமை செயலகத்தில் கடிதம் கொடுத்துள்ளனர். அங்கு சபாநாயகர் இல்லாததால் திங்கள் கிழமை ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா நிராகரிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும்.