பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யவும், அவருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இது, ராகுல் காந்தி எஃப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து வந்துள்ளது.
மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றபோது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘எஃப்ஸ்டீன் கோப்புகள்’ தொடர்பாக முன்னாள் தூதரும் தற்போதைய அமைச்சருமான ஹர்தீப் சிங் பூரி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனேவின் வெளியிடப்படாத புத்தகம் விநியோகிக்கப்பட்டது உட்பட பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் தொடர்பாக ராகுல் காந்திக்கும் பாஜக எம்பிக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில், நிஷிகாந்த் துபே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, “ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பில் இருக்கிறார். அவருக்கு நிதியளிப்பது யார், வெளியிடப்படாத புத்தகம் அவருக்கு எப்படிக் கிடைத்தது? மேலும், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனும் அவர் தொடர்பில் இருக்கிறார் என்பதுபோல் தெரிவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறேன். என்னுடைய மனுவில் அவர் சோரோஸ் அறக்கட்டளை, ஃபோர்டு அறக்கட்டளை மற்றும் USAID உடன் தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவுக்கு எவ்வாறு பயணம் செய்கிறார்? இந்தியா எதிர்ப்பு சக்திகளுடன் எவ்வாறு கூட்டுச் சேர்கிறார் என்பதைக் குறிப்பிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குறித்து, அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.