பாஜக எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா சர்ச்சை பேச்சு janardan mishra
இந்தியா

’தூய்மையான பெட்ரோல் உங்க அப்பா வீட்டிலிருந்து வருமா..?’ பாஜக எம்பி சர்ச்சை பேச்சு!

இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், தூய்மையான பெட்ரோல் உங்க அப்பா வீட்டிலிருந்து வருமா..? என பாஜக எம்பி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Rishan Vengai

மத்திய அரசு 2014 முதல் பெட்ரோலில் எத்தனால் கலப்பை அதிகரித்து 2022ல் 10% இலக்கை எட்டியதுடன், தற்போது E20 திட்டத்தில் 20% எத்தனால் கலந்த எரிபொருள் விற்பனை செய்கிறது. இதனால் வாகனங்கள் பாதிக்கப்படுகின்றன, 100% தூய்மையான பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுகிறது. இதற்கு எதிராக பாஜக எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா, “தூய்மையான பெட்ரோல் உங்க அப்பா வீட்டிலிருந்து வருமா?” என சர்ச்சை கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு சோதனை முயற்சியாக பெட்ரோலில் 1.5 சதவீதம் எத்தனாலை கலந்தது. அதன் பின்னர் இந்த விகிதம் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 2022-ம் ஆண்டு பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயித்து மத்திய அரசு செயல்பட்டு வந்த நிலையில், அந்த இலக்கும் எட்டப்பட்டுள்ளது. தற்போது E20 திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் எரிபொருளில் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய்க்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதை குறைக்கவும், கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

இதனிடையே பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகுவதாகவும் தொடர்ந்து விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. மேலும் எத்தனால் கலக்கப்படாத 100% தூய்மையான பெட்ரோலையும் பெட்ரோல் பங்குகளில் விற்பனை செய்ய வேண்டும் என்றும், நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளைத் தேர்வு செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் E20 பெட்ரோலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் கேள்வி எழுப்பிய பாஜக எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா, பற்றாக்குறை நிலவும் நிலையில் பெட்ரோல் எங்கிருந்து கிடைக்கும் என்பதை எத்தனால் கலந்த பெட்ரோல் உபயோகிக்க எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் விளக்க வேண்டும் என கேள்விஎழுப்பினார்.

janardan mishra

மத்திய பிரதேச மாநிலம் ரேவாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் 20சதவீத கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தியாவதாக குறிப்பிட்ட அவர், பிரேசிலில் எத்தனாலில்தான் வாகனங்கள் ஓடுவதாகக் கூறினார். எத்தனால் கலப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், தூய்மையான பெட்ரோல் அவர்களின் தந்தைவீட்டிலிருந்து வருமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஜனார்த்தன் மிஸ்ரா பேசியது சர்ச்சையானது.