தனது தந்தை கொலை மிரட்டல் விடுவதாக குற்றம்சாட்டிய பாஜக எம்.எல்.ஏ மகளின் கணவர் நீதிமன்ற வாசலில் இன்று கடத்தப்பட்டார்.
‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, உத்தரப்பிரதேச மாநிலம் பித்தாரி செயின்பூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள் சாக்ஷி மிஸ்ரா அண்மையில் அஜிதேஷ் குமார் என்பவரை திருமணம் செய்தார். அஜிதேஷ் குமார் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இந்தத் திருமணத்திற்கு ராஜேஷ் மிஸ்ரா எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இதனால் சாக்ஷி மிஸ்ரா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், “என்னுடைய திருமணத்தை எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எனது தந்தை சில ரவுடிகளை ஏவி விட்டு எங்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆகவே எங்களுக்கு மாவட்ட எஸ்பி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னுடைய உயிருக்கோ அல்லது எனது கணவரின் உயிருக்கோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு எனது தந்தைதான் காரணம். அப்படி ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால் அவரை நான் சட்டத்திற்கு முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்று தருவேன்” என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அலாகாபாத் நீதிமன்றத்தில் பாதுகப்பு அளிக்க கோரி ஒரு பொதுநல மனு ஒன்றையும் சாக்ஷி மற்றும் அவரது கணவர் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்தது. இதற்காக இன்று காலை சாக்ஷி மற்றும் அவரது கணவர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வாசல் 3ஆம் எண்ணில் நின்றுக் கொண்டிருந்த அவர்களை கறுப்பு காரில் வந்த சிலர் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். அத்துடன் சாக்ஷியின் கணவரான அஜிதேஷை காரில் கடத்திச் சென்றுள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கடத்திய கார் நம்பரை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அது ஆக்ராவைச் சேர்ந்த கார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.