இந்தியா

கோமியத்தை அடுத்து 'ஹவன்' புகை... - கொரோனாவை ஒழிக்க சங்கு ஊதும் மீரட் பாஜக பிரமுகர்!

kaleelrahman

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையை எதிர்த்து இந்தியா போராடிவரும் நிலையில், உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ்க்கு எதிராக ஒரு நிரந்தர சிகிச்சையைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், மீரட்டில் பாஜக தலைவர் கோபால் சர்மா என்பவர் நகரில் உள்ள தெருக்களில் மாட்டு சாணம், பசுவின் நெய், மா மரத்தின் தண்டுகளை கற்பூரம் கொண்டு எரித்து புகையை பரப்புவதோடு சங்கு ஊதி வருகிறார். இப்படி செய்வதால் கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சங்கு ஊதிக்கொண்டு, கூடவே ஹனுமான் மந்திரத்தை உரக்க சொல்லிக்கொண்டு ஹவன் எனப்படும் புகையை ஒரு வண்டியில் வைத்து பரப்பிக்கொண்டு வருகிறார். ஐந்து ஆண்களுடன் நடந்து செல்லும் அவர், நகர் முழுவதும் இப்படி செய்யும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக பேசியுள்ள பாஜக தலைவர் கோபால் சர்மா, " சுத்திகரிக்கவும், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கவும், ஆபத்தான வைரஸைக் கொல்லவும் மாட்டு சாணம் கேக்குகள் மற்றும் தேசி பசுவின் நெய், மா மரத்தின் தண்டுகள், கற்பூரம் போன்றவற்றைக் கொண்டு எரித்து நகரில் புகையை பரப்பி வருகிறேன்.

கூடவே ஹனுமன் மந்திரத்தை சொல்லியும், சங்கு ஊதியும் புகையை பரப்பி வருகிறேன். இப்படி செய்வதால் கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும். மற்றும் வளிமண்டலத்திலிருந்து ஆபத்தான வைரஸை கொல்ல முடியும். மீரட்டின் நய் பாஸ்தி மற்றும் சிவபுரம் பகுதிகளில் புனித ஹவன் புகையை நாங்கள் பரப்பினோம். அதோடு ஹனுமன் மந்திரத்தை பரப்புரை செய்தோம்" என்றும் தெரிவித்துள்ளார்.